இளம்பெருமான் அடிகள் அருளியது
பதினோராம் திருமுறை
1. சிவபெருமான் திருமும்மணிக்கோவை
அகவற்பா
757
முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
1
வெண்பா
758
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.
2
கட்டளைக் கலித்துறை
759
இடைதரில் யாமொன் றுணர்த்துவ துண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினுந் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.
3
அகவற்பா
760
சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே
மிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
வடிவே, முளிஎரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே, மடங்கல்மதஞ் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று, இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
தலைமுன்று வகுத்த தனித்தாட்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.
4
வெண்பா
761
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் - மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.
5
கட்டளைக் கலித்துறை
762
இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி
புதுநீர் மணத்தும் புலியத ளேஉடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் றோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.
6
அகவற்பா
763
வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமி விலகிப் பகல்செகுக் கும்மே
என்னைப், பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.
7
வெண்பா
764
உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட திவள்.
8
கட்டளைக் கலித்துறை
765
இவளப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்
அவளப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தியாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.
9
அகவற்பா
766
கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எஃகமும் முரணும்
ஓவாது பயிற்றும் உலகமால் உளதே.
10
வெண்பா
767
உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளிதேய்ந் துள்வளைந்த தொக்கும் - கிளரொளிய
பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.
11
கட்டளைக் கலித்துறை
768
கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந் தாலொக்குந் தெவ்வர்நெஞ்சத்
தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரட் சோதிப் பிழம்புமென் உள்ளத் திடங்கொண்டவே.
12
அகவற்பா
769
கொண்டற் கார்எயிற்றுச் செம்மருப் பிறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொழங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.
13
வெண்பா
770
நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடர்.
14
கட்டளைக் கலித்துறை
771
இடர்தரு தீவினைக் கெள்கிநை வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்
கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.
15
அகவற்பா
772
அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெளிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.
16
வெண்பா
773
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.
17
கட்டளைக் கலித்துறை
774
வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்தகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழன்இன் தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.
18
அகவற்பா
775
கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்ற
துணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.
19
வெண்பா
776
இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்
றுலகலொஞ் சென்றுழல்வ ரேனும் - மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
எங்கட் குறுந்தெரியின் ஈண்டு.
20
கட்டளைக் கலித்துறை
777
ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப் பிறைக் கீளும்எப் போதும்என் நெஞ்சத்தவே.
21
அகவற்பா
778
நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
யாதா கியதோ எந்தை நீதியென்
றுடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.
22
வெண்பா
779
பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கட் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.
23
கட்டளைக் கலித்துறை
780
தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிய மென்முலைப் பொன்மலை யாட்டிக் கெற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.
24
அகவற்பா
781
உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
பயிற்று நாவலர்க்
கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
25
வெண்பா
782
எளியமென் றெள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கையிலை எம்மாற் குறை.
26
கட்டளைக் கலித்துறை
783
குறையாப் பலிஇவை கொள்கஎன் கோல்வளை யுங்கலையும்
திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்
பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம் மேனிஎம் வேதியனே.
27
அகவற்பா
784
வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத் தண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.
28
வெண்பா
785
எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.
29
கட்டளைக் கலித்துறை
786
பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீர்இனிச் செய்வதென்னே
செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.
30
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com